திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 10ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தனியார் கிளினிக் செயல்படுவதாக மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பூமிநாதன் தலைமையில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஆகியோர் அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினரிடம் அவர் தன்னை மருத்துவர் என்றே அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின்பு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கலாவதி(வயது 45) என்பதும், பல வருடங்களாக கோபால்பட்டியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

கோவை டிஐஜி தற்கொலை விவகாரத்தில் இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்; 8 பேருக்கு சம்மன்

பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஊசி மருந்து போட்டதுடன் காயங்களுக்கு கட்டு போட்டும், மருந்துகள் கொடுத்தும் வந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற போலி மருத்துவர்களின் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்துவதும், கிராமங்களுக்கு சென்றே சிகிச்சை அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

புதுவையில் நடராஜர் சிலை மீது நின்றுகொண்டு படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சாணார்பட்டி காவல்துறையினர் கலாவதியை கைது செய்ததுடன் கிளினிக்கையும் பூட்டி சீல் வைத்தனர். அவர் மருத்துவம் பார்த்ததன் மூலம் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.