திண்டுக்கல் மாவட்டத்தில் சிவக்குமார் என்ற நபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பழைய வக்கம்பட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மைக்கில் பட்டியை சேர்ந்த சிவக்குமார் (38) கல்லால் தாக்கியும் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். படுகொலை செய்த கொலையாளிகள் ஆத்திரம் தீராததால் சிவகுமாரின் தலையை தனியாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவகுமாரை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் தலையை வெட்டி கையோடு எடுத்து சென்று விட்டாரா அல்லது வேறு பகுதியல் வீசி விட்டு சென்றுள்ளனரா என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்பநாய் லக்கி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது கொலை நடைபெற்ற இடத்திலிருந்து மைக்கேல்பட்டி ஊர் எல்லை வரை சென்று மோப்பநாய் நின்றது. மேலும் இப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட சிவகுமார் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளது என்றும் இதன் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.