இனி ஆசிரியர்கள் தப்பிக்கவே முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடியால் அதிர்ச்சி!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதாவது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சுமார் 46 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2.85 லட்சம் ஆசிரியர்கள், 17 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் யாராவது ஒருவர் புதிதாக அரசு பணியில் சேர்ந்தால், அவருடைய அனைத்து வகை கல்வி சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி இது உண்மைதானா என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த ஆய்வில் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மை என்று தெரிய வந்த பிறகே அவர் அரசு ஊழியராக அங்கீகாரம் செய்யப்படுவார்.
அதுவே, போலி சான்றிதழ்கள் என்று தெரிய வந்தால், உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பள பணத்தை பிடித்தம் செய்வதற்கும் சம்மந்தப்பட்ட துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அரசு பணிகளில் புதிதாக சேரக்கூடியவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உடனுக்குடன் அதன் உண்மை தன்மையை பரிசோதனை செய்யாததன் காரணமாக, பலர் ஆண்டு கணக்கில் போலிச் சான்றிதழ்களை கொடுத்து பணிபுரிவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுவரை கல்விச்சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வுக்கு உட்படத்தாமல் இருக்கக்கூடிய அனைத்து சான்றிதழ்களையும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கல்வித்தகுதி குறித்த உண்மைத்தன்மை தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. எனினும், பல்வேறு மாவட்டங்களில் இந்த பணிகள் முடிவடையவில்லை.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில்: ஆசிரியர்கள், பணியாளர்கள் பலர் 10, 12-ம் வகுப்பு மற்றும் உயர்கல்விச் சான்றுக்கான உண்மைத்தன்மை பெறாமல் இருக்கின்றனர். எனவே, இந்தாண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மைத்தன்மை பெற்றிருப்பது அவசியமாகும். தொடர்ந்து இதை கண்காணித்து அனைவரும் உண்மைத்தன்மை வாங்கியதை உறுதி செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.