கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைனில் உள்ள தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தற்போது உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில், சாய் நிகேஷ் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் துணை ராணுவப்படையில் கோவையை சேர்ந்த இளைஞர் சேர்ந்தது குறித்து உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உக்ரைன் நேட்டோ நாடுகளில் இணைவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 24ம் தேதி போர் தொடுக்க அந்நாட்டு அதிபர் புடின் உத்தரவிட்டார். 2 வாரங்களாக போர் நடைபெற்று வந்த சூழலில் தற்போது பொதுமக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உக்ரைனில் நடக்கும் போரைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடுகளின் வழியாக வெளியேறி வருகின்றனர். அங்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்களை மத்திய அரசுக் குழுவினர் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டு வருகின்றனர்.

போர் பதற்றம்

இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள மக்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றலாம் என அந்நாடு அறிவித்தது. இதையடுத்து ஏராளமானோர் அந்நாட்டின் ராணுவத்துக்கு உட்பட்ட துணை ராணுவப் படைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் இளைஞர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. 

 உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைனில் உள்ள தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தற்போது உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில், சாய் நிகேஷ் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த இந்திய உளவுத்துறையினர் கோவையில் உள்ள அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அப்போது அவரது அறை முழுவதும் ராணுவ வீரர்களின் புகைப்படம் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் சேர முடியாமல் போனதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற சாய் நிகேஷ் போர் சூழலை பயன்படுத்தி அந்நாட்டு ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.