சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல்... பொதுமக்கள் அதிர்ச்சி..!
கோவை ஒப்பணக்கார வீதியில் 6 மாடிகள் கொண்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்துள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதியில் 6 மாடிகள் கொண்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்துள்ளது.
சென்னையில் பல கிளைகளுடன் இயங்கிவரும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையிலும் தனது கிளையை தொடங்கியது. கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கட்டிடத்தில் தரை தளத்தைச் சேர்த்து 6 தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் துணி, பாத்திரம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த தளங்களில் பொதுமக்கள் நெருக்கடியின்றி உலவுவதற்கும், அமருவதற்கும், இடைவெளி இல்லாமல் பொருட்களை வைத்து நிரப்பி வைத்துள்ளதாகப் புகார் எழுந்தது. மேலும் தரைதளத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தை குடோனாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அனுமதி பெறப்பட்டதற்கு முரணாக கட்டிடம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கடையை மூடி விட்டு, உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் அறிவுரையின் பேரில் கட்டிடத்தை மாற்றி அமைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கடையை மூடவில்லை. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் உடனே கடைக்கு சீல் வைக்கக்கோரி உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல் வைத்தனர். சமீபத்தில் போக்குவரத்துக்கு இடையூறு தருவதாகக் கூறி, மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், திருநெல்வேலி சரவணா ஸ்டோருக்கு ’சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.