கொரோனா நோயாளிக்கு பிரியாணி கொண்டு வந்த மனைவி... அனுமதிக்காததால் மருத்துவமனையை அடித்து நொறுக்கி அட்டகாசம்..!
வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டதால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 27 வயது இளைஞர் மருத்துவமனையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டதால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 27 வயது இளைஞர் மருத்துவமனையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி கோவையில் நேற்று வரை மொத்தம் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தவிர அங்கு கொரோனா சந்தேகம் உள்ளவர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று உறுதியானவர்கள் சில நேரங்களில் மருத்துவமனையில் வழங்கப்படும் உணவையே உண்ணவேண்டும். சிலருக்கு அவர்களது வீடுகளில் இருந்து உணவு கொண்டு வரப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் அதனை அனுமதிப்பதில்லை. கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் 27 வயது வாலிபருக்கு, அவரது மனைவி நேற்று இரவு பிரியாணி கொண்டு வந்தார். அந்த இளைஞருக்கு பிரியாணியை கொடுக்க அனுமதிக்கவில்லை.
அந்த வாலிபர் எவ்வளவோ கேட்டுக்கொண்டும், பிரியாணியை கொடுக்க மருத்துவ ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், அங்கு தீயணைப்புக்காக தண்ணீர் செல்லும் குழாயை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கண்ணாடியை கையால் அடித்து உடைத்து ரகளை செய்தார். இதனால் அந்த கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அந்த வாலிபரின் கையிலும் காயம் ஏற்பட்டது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கோவை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இனி வெளியில் இருந்து சாப்பாடு கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை வீட்டிலோ, மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும்போது, கடுமையான மருத்துவ விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரியாணி கேட்டு அடம்பிடிக்கும் கொரோனா நோயாளியை கண்டு, மருத்துவமனை நிர்வாகம் நொந்துபோய் உள்ளது.