Asianet News TamilAsianet News Tamil

Coimbatore Day:கோயம்புத்தூருக்கு வயது 218; பறந்து விரிந்து தொழிலில் கோலோச்சி வீரநடை போடும் அற்புதமான நகரம்!!

கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் தமிழ்நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மக்கள் தொகை அடிப்படையில் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக் திகழ்கிறது. 

Coimbatore 218th birthday: A wonderful city with Industries good business and tourism places
Author
First Published Nov 24, 2022, 11:38 AM IST

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் 16 வது பெரிய நகரமாக உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் நிர்வாக தலைநகரமாகும். 1981 ஆம் ஆண்டில், சென்னை மற்றும் மதுரையைத் தொடர்ந்து தமிழகத்தில் மூன்றாவது மாநகராட்சியாக கோவை உருவானது.  கோயம்புத்தூர் நகரின் பழமையான ரயில் நிலையம் போத்தனூர் சந்திப்பு. 


தொழில் நகரம்:
தொழில் நகரமான இங்கு நகைகள், வெட் கிரைண்டர்கள், கோழிப் பண்ணை மற்றும் வாகன பாகங்கள் ஆகியவற்றின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. "கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்" மற்றும் "கோவை கோரா பருத்தி" ஆகியவை இந்திய அரசால் புவியியல் குறியீடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் ஜவுளித் தொழிலின் மையமாக இருப்பதால், இந்த நகரம் சில நேரங்களில் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்றும் அழைக்கப்படுகிறது.  2020 ஆம் ஆண்டின் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 7வது சிறந்த நகரமாக விளங்கியது. 


சங்க காலமும் சேரர்களும்:
சங்க காலத்தில் 1 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கோயம்புத்தூரை சேரர்கள் ஆட்சி செய்தனர். பாலக்காடு கணுவாய் வழியாக நாட்டின் மேற்கு பகுதிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான முக்கிய வணிகப் பகுதியாகவும், முக்கிய கிழக்கு இணைப்பு பகுதியாகவும் இருந்தது. கிபி 10ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கொங்கு நாட்டைக் கைப்பற்றினர். இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் ஆளப்பட்டது, அதைத் தொடர்ந்து நாயக்கர்கள், பாளையக்காரர் முறை அறிமுகமானது. இதன் கீழ் கொங்கு நாடு 24 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயம்புத்தூர் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வந்தது மற்றும் ஆங்கிலேய-மைசூர் போர்களில் திப்பு சுல்தானின் தோல்வியைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் 1799 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரை மெட்ராஸ் பிரசிடென்சியுடன் இணைத்தது. இரண்டாம் பொலிகர் போரில் (1801) கோயம்புத்தூர் முக்கிய பங்கு வகித்தது. அப்போது கோயம்புத்தூர் தீரன் சின்னமலையின் செயல்பாட்டின் கீழ் இருந்தது.

Coimbatore 218th birthday: A wonderful city with Industries good business and tourism places

நகராட்சி அந்தஸ்து:
புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் 1866 ஆம் ஆண்டில் நகராட்சி அந்தஸ்து பெற்றது. ராபர்ட் ஸ்டேன்ஸ் அதன் தலைவராக இருந்தார். கோயம்புத்தூர் தினம் நவம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது என்று கோயம்புத்தூர் வரலாறு அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மும்பையில் பருத்தித் தொழில் வீழ்ச்சியடைந்ததால் கோயம்புத்தூர் ஜவுளி தொழிலில் ஏற்றம் கண்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, கோயம்புத்தூர் நல்ல வளர்ச்சியை கண்டது. முக்கிய இடங்களில் 3 மால்களை அறிமுகப்படுத்தப்பட்டன. 


ஸ்மார்ட் சிட்டி:
முதலீட்டுக்கான சிறந்த சூழல் பட்டியலில் இந்திய நகரங்களில் நான்காவது இடத்தை கோயம்புத்தூர் பிடித்து இருக்கிறது என்று இந்திய தொழில் வர்த்தக சபை தெரிவித்து இருந்தது. சிறந்த உலகளாவிய அவுட்சோர்சிங் நகரங்களில் 17வது இடத்தை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மையான ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கப்படும் நூறு இந்திய நகரங்களில் ஒன்றாக கோவை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியாவில் வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்களில் கோயம்புத்தூர் தொடர்ந்து இடம் பெறுகிறது. 2015 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, கோயம்புத்தூர் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

நொய்யல் ஆறு:
கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது 642.12 கிமீ (247.92 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மேற்கு மற்றும் வடக்கே மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரால் சூழப்பட்டுள்ளது, வடக்குப் பகுதியில் நீலகிரி உள்ளது. நொய்யல் ஆறு நகரின் தெற்கு எல்லையாக அமைகிறது. கோயம்புத்தூரில் உள்ள எட்டு பெரிய குளங்கள் மற்றும் ஈரநிலப் பகுதிகள் உள்ளன. சிங்காநல்லூர், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், செல்வம்பதி, நரசம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வசிந்தாமணி மற்றும் குமாரசாமி ஆகியவையாகும். 

Coimbatore 218th birthday: A wonderful city with Industries good business and tourism places

மேற்குதொடர்ச்சி மலை:
நீலகிரி, ஆனைமலை மற்றும் மூணாறு மலைத்தொடர்களுடன் மேற்குப் பகுதி எல்லையைக் கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மேற்குத் தொடர்ச்சி மலையில் விலங்குகள் மற்றும் அரிய தாவரங்கள் நிறைந்துள்ளன. கோயம்புத்தூர் நகர்ப்புற சதுப்பு நிலங்களில் சுமார் 116 வகையான பறவைகள் உள்ளன. விலங்குகளில் இந்திய யானைகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், வங்கப்புலிகள், சோம்பல் கரடி போன்ற பல்வேறு அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தான உயிரினங்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன.

பருவநிலைகள்:
இரண்டுவிதமான பருவநிலை மாற்றங்களை கொண்டுள்ளன. வடகிழக்கு பருவமழை காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை மழை பொழியும். பாலக்காடு காணுவாய் வழியாக மேற்கில் இருந்து காற்றைப் பெறுவதால், தென்மேற்கு பருவக்காற்று காலத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் மழையைப் பெறுகின்றன. இந்த காலங்களில் பொழியும் மழையால் நகரின் நீர் தேவை பூர்த்தி ஆவதில்லை. மேலும் சிறுவாணி மற்றும் பில்லூர் போன்ற நீர் வழங்கல் திட்டங்களால் நீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. 

மக்கள் தொகை:
2022 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் நகரின் மெட்ரோ பகுதி மக்கள் தொகை 29,35,000 ஆகும். இது 2021 ஆம் ஆண்டில் இருந்து 2.62% அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் நகரின் மெட்ரோ பகுதி மக்கள் தொகை 28,60,000 ஆக இருந்தது. தலைநகர் சென்னைக்கு அடுத்து மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், இந்தியாவின் பதினாறாவது பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்பாகவும் உள்ளது. நகரத்தின் சராசரி கல்வியறிவு 82.43% ஆகும். தேசிய சராசரியான 72.99% விட அதிகமாகும். பாலின விகிதத்தில் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் உள்ளனர். 

வருவாய் வட்டங்கள்:
கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு) மற்றும் பொள்ளாச்சி என மூன்று  வருவாய் மண்டலங்கள் உள்ளன. கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு), மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, பேரூர், மதுக்௧ரை மற்றும் வால்பாறை ஆகியவை வருவாய் வட்டங்ககளாக உள்ளன.  

கோவை பெயர் காரணம்:
பழங்காலத்தில் கோயம்புத்தூர் பழங்குடியின வசிப்பிடமாக இருந்ததாகவும், இங்கு வலிமையான கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதான் பின்னர் மருவி கோயம்புத்தூர் ஆனது என்று கூறப்படுகிறது.  

மேலும், கோவன் என்ற ஒரு தலைவர் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் இருந்த கோவனூரில் வசித்து வந்ததாகவும், இதுவே கோவன் புத்தூர் என்றும் பின்னர் கோயம்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுவே இன்றைய கோவை ஆகும்.

முக்கிய கோயில்கள்:
மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் மற்றும் சுற்றுலா தளங்களாக ஆதியோகி சிவன் சிலை, கோவை கொண்டாட்டம் அமியூஸ்மென்ட் பார்க், சிறுவாணி வாட்டர் பால்ஸ், வஉசி பார்க் மற்றும் உயிரியல் பூங்கா, கோவை குற்றாலம், வால்பாறை, ஊட்டி ஆகிய இடங்களை குறிப்படலாம்.

விவசாயம், கல்வி, சிறுகுறு தொழில்கள், ஜவுளி நூற்பாலைகள் என்று தன்னகத்தே தொழில் வளத்தைக் கொண்டு இருக்கும் கோயம்புத்தூர் எப்போதும் தேசிய மற்றும் மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் மிகையில்லை. 

(Source Wikipedia)

Follow Us:
Download App:
  • android
  • ios