பேனர் விவகாரம்... மாநகராட்சி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம்..!
அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை, ரூ.5,000 அபராதம் என்ற சென்னை மாநகாரட்சியின் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை, ரூ.5,000 அபராதம் என்ற சென்னை மாநகாரட்சியின் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்தைத் தொடர்ந்து, பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள நோட்டீஸ் ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது, அந்த மனுவில் டிஜிட்டல் பேனர் நிறுவன உரிமையாளரான எஸ்.பஷீர் அஹமது தாக்கல் செய்த மனுவில், சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து பலியான சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இனியும் இதுபோன்றதொரு சம்பவம் நிகழக்கூடாது. ஆனால், அந்த சம்பவத்தைக் காரணம் காட்டி பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
டிஜிட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. தனிநபர் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் பேனர்களை அச்சடித்துக் கொடுத்து வருகிறோம். இந்த பேனர்களை அச்சடித்து கொடுப்பது மட்டுமே எங்களது வேலை. அந்த பேனர்களை முறைப்படி அனுமதி பெற்று வைக்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கின்றனரா என்பது உள்ளிட்ட விவரங்களை எல்லாம் எங்களுக்கு தெரிவிப்பது இல்லை. மேலும், தற்போது பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களைப் பூட்டி சீல் வைக்கின்றனர். இதனால் நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த இயந்திரங்கள் பழுதடைய வாய்ப்புள்ளது.
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு யார் காரணமானவர்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பேனர் அச்சடிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல. இந்தத் தொழிலை, தமிழ்நாடு நகராட்சி சட்டத்திருத்தத்தின் கீழ் முறையான உரிமம் பெற்று நடத்தி வருகிறோம். முறையாக மத்திய, மாநில அரசுகளுக்கு வரி செலுத்தி வருகிறோம். ஆனால், தற்போது டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் என சென்னை மாநகராட்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள எந்த உத்தரவிலும் டிஜிட்டல் பேனர் தொழிலை தடை செய்யவில்லை. எனவே டிஜிட்டல் பேனர்களுக்கு எதிரான மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்துள்ள நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்நிலையில், அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறையுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.