உலக ஹாக்கி லீக்: இந்தியாவும், அர்ஜென்டீனாவும் இன்று அரையிறுதியில் மோதல்...
உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், அர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன.
உலக ஹாக்கி லீக் போட்டியின் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா.
நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது அர்ஜென்டீனா.
இதனையடுத்து அரையிறுதியில் இந்த இரண்டு அணகளும் மோதுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி தொடர்ச்சியாக இரு கோல்கள் அடித்தது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அந்த அணியின் லுகாஸ் வில்லா, ஃபீல்டு கோல் ஒன்றை அடித்து அணிக்கு முன்னிலை தந்தார்.
அர்ஜென்டீனாவின் மட்டியாஸ் பாரெடெஸ் 29-வது நிமிடத்தில் கோலடித்து, தனது அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.
இந்த நிலையில், அர்ஜென்டீனாவுக்கு பதிலடியாக அதே நிமிடத்தில் இங்கிலாந்து தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் டேவிட் கான்டன் அணிக்கான முதல் கோலை அடித்தார்.
இவ்வாறாக முதல்பாதி ஆட்டம் முடிவுக்கு வர, அதில் அர்ஜென்டீனா 2-1 என முன்னிலை வகித்தது. பின்னர் தொடங்கிய 2-வது பாதியிலும் அர்ஜென்டீனாவின் கையே ஓங்கியிருந்தது. 34-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அதன் வீரர் ஜுவான் கிலார்டி கோலாக மாற்றினார். இதனால் அர்ஜென்டீனா3-1 என்ற நிலையை எட்டியது.
ஏறத்தாழ அர்ஜென்டீனாவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்தின் ஆடம் டிக்ஸன் ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, இங்கிலாந்து கோல் எண்ணிக்கை இரண்டானது.
இறுதியில் அர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.