சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியா - ஆர்ஜென்டீனா அணிகள் இன்று மோதல்...
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில், உலகின் 2-ஆம் நிலையில் உள்ள ஆர்ஜென்டீனா அணியை இன்று சந்திக்கிறது.
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் இந்திய அணியைப் பொருத்த வரையில், சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பியதில்லை.
அதனைத் தொடர்ந்து சர்தார் சிங் தலைமையில் பங்கேற்று வரும் இந்தியா, 2008-இல் வெள்ளி, 2015-இல் வெண்கலம், 2016-இல் வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளது.
இம்முறை இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த முன்கள வீரர்கள் ஆகாஷ்தீப் சிங், சுனில், மன்தீப் சிங், நடுகள வீரர் மன்பிரீத் சிங், கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே, இளம் வீரர்களை ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு வழிப்படுத்தும் பொறுப்பு கேப்டன் சர்தாருக்கு உள்ளது.
ஆர்ஜென்டீனாவைப் பொருத்த வரையில் அதன் சிறந்த பயிற்சியாளரான கார்லோஸ் ரெடெகுய் ராஜிநாமா செய்துள்ள நிலையில், அந்த அணி போட்டியில் பங்கேற்கிறது. அவரது பயிற்சியின் கீழாகவே அந்த அணி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
எனினும், கொன்ஸாலோ பெய்லாட், லூகாஸ் ரோஸி, ஜுவான் மேனுவல் விவால்டி, பெட்ரோ இபாரா, மடியாஸ் பரிதாஸ் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருப்பதால், ஆர்ஜென்டீனா பலத்துடனே இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தியா 2-வது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.