புரோ கபடி: யு.பி.யோதாவை புரட்டி எடுத்த பெங்கால் வாரியர்ஸ்…
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 16-வது ஆட்டத்தில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்து பெங்கால் வாரியர்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 16-வது ஆட்டம் நாகபுரியில் நேற்று நடைபெற்றது. இதில், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு.பி.யோதா அணி மோதின.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்கால் அணி தாக்குதல் ஆட்டத்தில் இறங்கி அசத்தலாக ஆடியது.
அந்த அணியின் மணீந்தர் சிங் தனது அபார ரைடால் புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவிலேயே பெங்கால் வாரியர்ஸ் அணி 22-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் யு.பி.யோதா அணி சரிவிலிருந்து மீள்வதற்கு போராடியது. ஆனால், பெங்கால் அணியின் ஆட்டத்தால் யு.பி.யோதா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை.
அதேநேரத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் வினோத் குமார், ஜங் குன் லீ ஆகியோர் அபாரமாக ஆட, அந்த அணி 40-20 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது.
பெங்கால் தரப்பில் வினோத் குமார் 8 புள்ளிகளையும், குன் லீ 7 புள்ளிகளையும், மணீந்தர் சிங் 6 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.