#TokyoOlympics INDvsBEL ஹாக்கி மேட்ச் பார்த்துட்டு இருக்கேன்! நம்ம பசங்க செமயா ஆடுறாங்க-பிரதமர் மோடி பெருமிதம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா - பெல்ஜியம் இடையேயான ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியை பார்த்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவீட் செய்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவிற்காக பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். பாக்ஸிங்கில் லவ்லினா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஹாக்கியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் சிறப்பாக ஆடிவருகின்றன. ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஆடவர் ஹாக்கி காலிறுதியில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, இன்று அரையிறுதியில் பெல்ஜியத்துடன் ஆடிவருகிறது.
இந்த போட்டியில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடிக்க, இந்தியாவிற்கு ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோலை அடித்து கொடுத்தார். இதையடுத்து மந்தீப் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின்னர் கோலுக்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் அணிக்கு அலெக்ஸாண்டர் ஹென்ரிக்ஸ் 2வது கோலை அடித்து கொடுத்தார். ஆட்டம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொண்டிருப்பதாக டுவீட் செய்துள்ளார். இதுகுறித்த பிரதமர் மோடியின் டுவீட்டில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா - பெல்ஜியம் இடையேயான ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நமது வீரர்களின் திறமையை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.