நியூஸிலாந்து அணிக்‍கு எதிரான நாளை மறுநாள் நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி, இந்தூர் சென்றடைந்தது. இந்திய அணியில் ஷிகர் தவான், புவனேஷ்குமாருக்‍கு பதிலாக கருண் நாயர், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணிக்‍கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரைக்‍ கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுதினம், மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்முறையாக இந்தூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இதற்கான வலைப்பயிற்சியிலும் இன்று ஈடுபடவுள்ளனர்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய பவுன்சரில், தவானின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்தூரில் நடைபெறவுள்ள போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. அவருக்‍கு பதிலாக கருண் நாயர் விளையாடுவார் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்குமாரும் காயமடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்‍கெட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்கிறது. முதல் ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி, தர்மசாலாவில் வரும் 16-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்‍கப்படவுள்ளது. டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள பி.சி.சி.ஐ. தேர்வுக்‍குழு கூட்டத்தில் இந்திய அணி தேர்ந்தெடுக்‍கப்படவுள்ளது. தேர்வுக்‍குழுத் தலைவராக புதிதாக நியமிக்‍கப்பட்டுள்ள முன்னாள் விக்‍கெட் கீப்பர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான குழுவினர், இந்திய அணி வீரர்களை தேர்ந்தெடுக்‍கவுள்ளனர். ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி கேப்டனாக மகேந்திர சிங் தோனியே தொடர்ந்து நீடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.