இந்தியாவுக்காக ஓடிய கால்கள் ஓய்ந்தன.. முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்
பறக்கும் மனிதனாக கொண்டாடப்பட்ட 91 வயது முன்னாள் தடகள வீரரான மில்கா சிங் காலமானார்.
பஞ்சாப்பை சேர்ந்த மில்கா சிங், 1960ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 4ம் இடத்தை பிடித்து நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார். பதக்கத்தை தவறவிட்டிருந்தாலும், இந்திய மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
பறக்கும் மனிதன் என்று இந்தியர்களால் கொண்டாடப்பட்ட மில்கா சிங் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கம் வென்றவர். காமன்வெல்த் போட்டிகளிலும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர்.
91 வயதான மில்கா சிங் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொரோனாவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், கொரோனாவால் சிகிச்சை பெற்றுவந்த மில்கா சிங், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். மில்கா சிங்கின் மறைவிற்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் விளையாட்டு, சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.