kohli appreciate srilankan player fielding

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி, 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

163 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் 47வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஹித் சர்மா லெக் சைடில் தூக்கி அடித்த பந்தை, காற்றில் பறந்து கேட்ச் செய்ய முயன்ற லக்மலின் கையில் இருந்து பந்து தப்பியது. எனினும் அவரது முயற்சியை மைதானமே கைதட்டி பாராட்டியது.

இலங்கை அணியினர் கையை உயர்த்தி தட்டி பாராட்டினர். அப்போது களத்தில் இருந்த கேப்டன் கோலி, லக்மலின் முயற்சியை கைதட்டி பாராட்டினார். எதிரணியினராக இருந்தாலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டால், ஒரு பிளேயர் என்ற முறையில் நான் பாராட்டுவேன் என்பதை நிரூபிக்கும் வகையில் கோலி பாராட்டு அமைந்துள்ளது.

பொதுவாகவே ஆட்டத்தின்போது கோலி ஆக்ரோஷமாக செயல்படுவார். அதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், பல சீனியர் வீரர்கள் கோலியின் அணுகுமுறையை வரவேற்கத்தான் செய்தார்கள். களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை யார் வெளிப்படுத்தினாலும் கோலி பாராட்டுவார் என்பதற்கு இது ஒரு சான்று.