கேரளா அணிக்‍கு எதிரான ஐ.எஸ்.எல். கால்பந்து லீக்‍ ஆட்டத்தில், 1-0 என்ற கோல் கணக்‍கில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக்‍ எனப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 3-வது சீசனுக்‍கான போட்டிகள், கவுகாத்தி, கொல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு நடைபெற்ற 5-வது லீக்‍ ஆட்டத்தில், Kerala Blasters FC அணியும், Atletico de Kolkata அணியும் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய கேரள அணிக்‍கு, சவால் அளிக்‍கும் வகையில் கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தன. தொடர்ந்து 2-வது பாதி ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் Javier Grande அபாரமாக கோல் அடித்து கேரள அணிக்‍கு அதிர்ச்சியளித்தார்.

இறுதிவரை போராடியும் கேரள அணியால் கோல் எதுவும் அடிக்‍க இயலாததால், 1-0 என்ற கோல் கணக்‍கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு தொடரில் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவு செய்தது. தொடர்ந்து, தனது 2-வது லீக் ஆட்டத்திலும் கேரள அணி தோல்வியை தழுவியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.