Asian Youth Games 2025: ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் ஈரானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 (Asian Youth Games 2025) பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 119 வீராங்கனைகள் மற்றும் 103 வீரர்கள் என மொத்தம் 222 விளையாட்டு வீரர்கள் 21 விளையாட்டுகளில் பதக்க வேட்டைக்காக களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது

அதாவது மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய மகளிர் அணி 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை பந்தாடி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இரண்டாம் இடம் பிடித்த ஈரான் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. இந்திய மகளிர் அணியில் நமது சென்னை கண்ணகி நகரை சேர்ந்த இளம் வீராங்கனை கார்த்திகாவும் இடம்பெற்றிருந்தார்.

கண்ணகி நகர் கார்த்திகா அசத்தல் ஆட்டம்

அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்திய அணி தங்கம் வென்றதை தொடர்ந்து கண்னகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. அதாவது ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதங்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இந்தியாவுக்கு பதக்கம் வென்றவர்கள் யார்? யார்?

15 வயதான குஷி, பெண்கள் 70 கிலோ குராஷ் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். கனிஷ்கா பிதுரி மற்றும் அரவிந்த் ஆகியோரும் இந்தியாவிற்காக குராஷில் பதக்கங்களை வென்றனர். ரஞ்சனா யாதவ், பெண்களுக்கான 5000 மீட்டர் நடைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் தடகளத்தில் இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.