தொடர் தோல்வியிலிருந்து மீண்ட டெல்லி அணிக்கு விழுந்த அடுத்த அடி
தொடர் தோல்வியிலிருந்து மீண்ட டெல்லி அணி, அதை அனுபவிப்பதற்கு முன் அடுத்த அதிர்ச்சியை சந்தித்துள்ளது.
இதுவரை நடந்த 10 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறாத ஒற்றை அணி டெல்லி தான். ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி, கம்பீரின் கேப்டன்சி என கலக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.
தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து கம்பீர் விலக, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில், கொல்கத்தாவை வீழ்த்தி தொடர் தோல்வியிலிருந்து டெல்லி மீண்டது.
இளம் ஷ்ரேயாஸின் கேப்டன்சியில், வெற்றி பெற்று புதிய உத்வேகம் அடைந்த டெல்லி அணிக்கு, அந்த வெற்றியை அனுபவிப்பதற்கு முன்னதாகவே அடுத்த அதிர்ச்சி கிடைத்துள்ளது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். டெல்லி அணி தக்கவைத்த வெளிநாட்டு வீரர் கிறிஸ் மோரிஸ். இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகளையும் 46 ரன்களையும் மட்டுமே எடுத்துள்ளார். எனினும் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால், அவரை அணி தக்கவைத்திருந்தது.
இந்நிலையில், காயம் காரணமாக அவர் விலகியதால், தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலாவை டெல்லி அணி தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக அண்மையில் நடந்த டி20 தொடரில் அறிமுகமாகி 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர் ஜூனியர் டாலா.