நீங்க மட்டும்தான் சம்பவம் செய்வீங்களா..? சென்னையை பழிக்கு பழி வாங்கிய ஹைதராபாத்!!
ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னை அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
7வது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி, அதிகமுறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பெறுகிறது.
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதி சுற்று போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. முதலில் பேட்டின் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், சாஹர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். அதன்பிறகு கோஸ்வாமி, வில்லியம்சன், மனீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹாசன், யூசுப் பதான் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, கடைசி ஓவர்களில் பிராத்வைட் மட்டும் அதிரடியாக ஆடி, ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 139 ஆக உயர்த்தினார்.
140 ரன்கள் என்ற எளிய ஸ்கோரை விரட்டிய சென்னை அணியும், ஹைதராபாத்திற்கு சற்றும் சளைக்காத வகையில், விக்கெட்டுகளை இழந்தது. வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, சாஹர், ஹர்பஜன் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. டுபிளெசிஸின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி சென்னை வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், இரண்டு அணிகளுமே முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமலே முதல் விக்கெட்டை இழந்தன. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், சாஹர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை அணியின் தொடக்க வீரரும் அபாயகரமான பேட்ஸ்மேனுமான வாட்சனை புவனேஷ்வர் குமார் முதல் ஓவரின் 5வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார். இரு அணிகளுமே ரன் ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது.