காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்தியாவின் மேரி கோம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...
காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மேரி கோம், இலங்கையின் அனுஷா தில்ருக்ஷியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.
இதில் ஐந்து முறை உலக சாம்பியனான மேரி கோம் (35), இலங்கையின் 39 வயதான அனுஷாவுடன் அரையிறுதிச் சுற்றில் மோதினர்.
காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மேரி கோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அனுஷா தில்ருக்ஷியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
அதேபோன்று, ஆடவர் பிரிவில் விகாஸ் யாதவ் உள்பட மூன்று பேர் அரையிறுதிக்கு முன்னேறினர். கெளரவ் சோலங்கி 52 கிலோ பிரிவிலும், மணிஷ் கெளஷிக் 60 கிலோ பிரிவிலும், விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ பிரிவிலும் ஆகியோர் தங்கள் பிரிவு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.