ஊக்கமருந்து பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஒரு வருடம் விளையாட தடை...
ஊக்கமருந்து பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாஸாத்-க்கு ஓராண்டு தடை விதித்துள்ளது ஐசிசி.
முகமது ஷாஸாத் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளிலும், அதே எண்ணிக்கையிலான டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
"ஐசிசி விதிகளின் கீழ், ஊக்கமருந்து பரிசோதனைக்காக விக்கெட்கீப்பர் - பேட்ஸ்மேனான முகமது ஷாஸாத்திடம் இருந்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தது.
அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின்படி, அவரது உடலில் கிளென்பியுடெரோல் என்ற மருந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இது, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் (வாடா) தடைசெய்யப்பட்ட ஒரு மருந்தாகும். தனது இந்த விதிமீறலை ஷாஸாத் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஓராண்டுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடைக்காலமானது, அவரிடமிருந்து மாதிரி பெறப்பட்ட 2017 ஜனவரி 17 தேதியில் இருந்து கணக்கிடப்படும். அதன்படி, 2018 ஜனவரி 17-ஆம் தேதி முதல் அவர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்" என்று ஐசிசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, உடல்எடை குறைப்புக்காக தான் எடுத்துக்கொண்ட மருந்தில், தடைசெய்யப்பட்ட மருந்துக் கலப்பு இருந்ததாகவும், தான் வேண்டுமென்றே அந்த மருந்தை பயன்படுத்தவில்லை எனவும் முகமது ஷாஸாத் அளித்த விளக்கத்தை ஐசிசி ஏற்றுக் கொண்டுள்ளது.