சாஹலை சாதிய ரீதியில் இழிவுபடுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில், தான் உள்நோக்கத்துடன் எதுவும் பேசவில்லை என்று விளக்கமளித்துள்ள யுவராஜ் சிங், அதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.  

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர். இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாத யுவராஜ் சிங், கடந்த ஆண்டு ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். 

கொரோனா ஊரடங்கு காலத்தில், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் யுவராஜ் சிங், ரோஹித் சர்மாவுடனான உரையாடலில் பேசிய விஷயம், அவரது நன்மதிப்பை கெடுக்கும் விதமாக அமைந்தது.

யுவராஜ் சிங் - ரோஹித் சர்மா உரையாடலின்போது, சாஹல் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது குறித்து பேசிய யுவராஜ் சிங், சாஹல் மாதிரியான ஆட்களுக்கு(இந்த இடத்தில் தான் சாதியை சுட்டிக்காட்டும் விதமாக பேசியிருக்கிறார்) உருப்படியாக செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. அவர் ஷேர் செய்யும் வீடியோக்களை பார்த்தீர்களா? என்று கூறும்போது, சாதியை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தும் விதமாக பேசியிருந்தார். 

அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், யுவராஜ் சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்காக ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி, யுவராஜ் சிங் மன்னிப்பு கோர வலியுறுத்தி பதிவிட்டுவந்தனர். 

இந்நிலையில், தான் உள்நோக்கத்துடன் எதுவும் பேசவில்லை என்று விளக்கமளித்துள்ள யுவராஜ் சிங், அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டுவிட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள யுவராஜ் சிங், சாதி, மதம், இனம் என எந்தவிதமான பேதத்திலும் நம்பிக்கையில்லாதவன் என்பதை தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். எப்போதுமே, நாட்டு மக்களின் நலனுக்காகவே உழைத்து கொண்டிருப்பவன் நான். நான் பேசியது தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. நான் உள்நோக்கத்துடன் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்பதை பொறுப்புள்ள இந்தியனாக தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றாலும், நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மனதார வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…