ரொம்ப உண்மையா இருந்ததுதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான், தான் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை இப்போது தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யூனிஸ் கான். சர்வதேச அளவில் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்றுகூட யூனிஸ் கானை சொல்லலாம். டெக்னிக்கலாக அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். பாகிஸ்தானுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10,099 ரன்கள் அடித்துள்ள யூனிஸ் கானின் டெஸ்ட் சராசரி 52.06. 265 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7249 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யூனிஸ் கான்.
அதுமட்டுமல்ல, பாகிஸ்தான் வென்ற 2 ஐசிசி கோப்பைகளில் ஒன்று யூனிஸ் கான் கேப்டன்சியில் வென்றது. ஆம்.. 1992ல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒருநாள் உலக கோப்பையை வென்ற பின்னர், 2009ல் பாகிஸ்தான் அணி யூனிஸ் கான் கேப்டன்சியில் 2009ல் டி20 உலக கோப்பையை வென்றது.
டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த யூனிஸ் கானை, அடுத்த ஆறே மாதத்தில் கேப்டன்சியிலிருந்து நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் 11 ஆண்டுகள் கழித்து அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள யூனிஸ் கான், தான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய யூனிஸ் கான், உண்மையை பேசுபவர்களை இந்த உலகம் எப்போதுமே பைத்தியக்காரனாகத்தான் பார்க்கும். நாட்டிற்காக உண்மையாகவும் அர்ப்பணிப்புணர்வுடனும் இல்லாத சில வீரர்களை சுட்டிக்காட்டியதுதான் எனது தவறு என்று தெரிவித்துள்ளார்.
யூனிஸ் கான் அளவுக்கு நாட்டுக்கும் அணிக்கும் உண்மையாக இருக்க நினைக்காத, அப்படி நினைப்பவரை கேப்டனாக இருக்க விரும்பாதவர்களால்தான் யூனிஸ் கான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.