NZ vs IND: முதல் ODI-க்கு வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்! ரிஷப்-சாம்சன் ரசிகர்கள் மோதல்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வாசிம் ஜாஃபர் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்த நிலையில், சஞ்சு சாம்சன் - ரிஷப் பண்ட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரை 1-0 என ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறாததால் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் இந்திய அணி ஷிகர் தவான் கேப்டன்சியில் களமிறங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (நவம்பர் 24) ஆக்லாந்தில் நடக்கிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ஷுப்மன் கில் இருவரையும் தேர்வு செய்தார். 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்தார். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தார். பேட்டிங் - ஸ்பின் ஆல்ரவுண்டராக தீபக் ஹூடாவையும், ஸ்பின் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரையும் தேர்வு செய்தார் வாசிம் ஜாஃபர். ஃபஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களாக ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
டி20 தொடரிலேயே சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் தொடரிலாவது அவருக்கு ஆட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாசிம் ஜாஃபர் சாம்சனை தேர்வு செய்யாதது அவரது ரசிகர்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.
முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!
சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாதது அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும், பிசிசிஐக்கு பயந்துகொண்டு முன்னாள் வீரர்கள் இதுமாதிரி நடந்துகொள்வதாகவும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அதேவேளையில், ரிஷப் பண்ட்டின் ரசிகர்கள் அவரது தேர்வை சரிதான் என்கின்றனர். இப்படியாக ரிஷப் பண்ட் - சஞ்சு சாம்சன் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.