ராகுல் டிராவிட் இடத்தில் நீங்கதான் இருக்கணும்..! பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த விவிஎஸ் லக்ஷ்மண்
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்க விரும்பிய பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க விவிஎஸ் லக்ஷ்மண் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடையும் நிலையில், அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளார்.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதையடுத்து, அவர் வகித்த பதவிக்கு மற்றொரு நபரை நியமிக்க வேண்டியுள்ளது.
ராகுல் டிராவிட் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். டி20 உலக கோப்பைக்கு அடுத்த நியூசிலாந்து தொடரிலிருந்து ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட தொடங்குவார். எனவே அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு அவரைப்போன்ற ஒரு சிறந்த முன்னாள் வீரரை நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதையும் படிங்க - #T20WorldCup பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன்! முன்னாள் வீரர்களின் அதிரடி தேர்வு
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மணை அந்த பதவியில் நியமிக்க விரும்பிய பிசிசிஐ, இதுதொடர்பாக அவரை நாடியபோது அந்த பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வேறு சிறந்த ஒரு முன்னாள் வீரரை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ தேடிவருகிறது.
லக்ஷ்மண் இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8781 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்துவருகிறார்.