ரஹானே ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் எப்படி ஆடுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப சிறப்பாக திட்டமிட்டு அவரை வீழ்த்தினார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டியில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2ம் நாள் தான் ஆட்டம் தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 3ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி, 149 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையிலிருந்து, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்தார். கோலியும் ரஹானேவும் ஆடியவரை இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் கோலி 44 ரன்னிலும் ரஹானே 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்து, 217 ரன்களுக்கு சுருண்டது.
கோலி ஆட்டமிழந்தபிறகும், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேவை அருமையாக பிளான் செய்து வீழ்த்தினார் கேன் வில்லியம்சன். ரஹானே 49 ரன்களை எட்டிய நிலையில், பவுலர் நீல் வாக்னரிடம் சென்று பேசிவிட்டு, ஒரு ஃபீல்டரை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்தினார் கேன் வில்லியம்சன். அதற்கடுத்த பந்தை நீல் வாக்னர் ஷார்ட் பிட்ச் பந்தாக வீச, அதை சரியாக அந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து ரஹானே ஆட்டமிழந்தார்.
ரஹானே ஷார்ட்பிட்ச் பந்து வீசினால் ஹூக் ஷாட் ஆடுவார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு அந்த திசையில் ஃபீல்டரை நிறுத்தி ஷார்ட் பிட்ச் பந்தை வீசவைத்து வலைவிரித்தார் வில்லியம்சன். அவர் நினைத்தபடியே அந்த வலையில் விழுந்தார் ரஹானே.
இதுகுறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்ஷ்மண், கேன் வில்லியம்சன் கேப்டன்சி ஒவ்வொரு முறையும் என்னை கவர்கிறது. கிறிஸ்ட்சர்ச்சில் ரஹானேவிற்கு எதிராக பயன்படுத்திய அதே உத்தியைத்தான் நியூசிலாந்து இந்த போட்டியிலும் செயல்படுத்தியது. வில்லியம்சன் நீல் வாக்னருடன் சென்று பேசினார். அதற்கு முன்பு வரை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டர் இல்லை. வில்லியம்சன் வாக்னருடன் பேசிய பின்னர் தான், அங்கு ஃபீல்டர் நிறுத்தப்பட்டார். ஷார்ட் பிட்ச் பந்தில் ரஹானே கம்பல்சிவ் புல் ஷாட் ஆடுவார் என்று தெரிந்தே அங்கு ஃபீல்டர் நிறுத்தப்பட்டு ரஹானே வீழ்த்தப்பட்டார். ரஹானேவும் அதிருப்தியடையந்திருப்பார். அவர் உஷாராக இருக்க வேண்டும் என்று லக்ஷ்மண் தெரிவித்தார்.
