ரஹானேவின் பேட்டிங் ஆர்டரில் இறக்கப்பட்ட ஜடேஜா..! விவிஎஸ் லக்ஷ்மண் சொல்லும் காரணம்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரஹானேவின் பேட்டிங் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜாவை இறக்கியதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித்(11), ராகுல்(17), புஜாரா(4), ஜடேஜா(10), ரஹானே(14) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து இந்திய அணி வெறும் 191 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் ரஹானேவின் 5ம் பேட்டிங் வரிசையில் ஜடேஜா இறக்கிவிடப்பட்டார்.
இந்த தொடர் முழுவதுமாகவே இந்திய அணியின் துணை கேப்டனும் சீனியர் வீரருமான அஜிங்க்யா ரஹானே ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார். லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் மட்டும் ஒரு அரைசதம்(61) அடித்தார். அதைத்தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலுமே சொதப்பினார். இந்த தொடரில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் சேர்த்தே மொத்தமாக வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி 18.17 ஆகும்.
ரஹானே தொடர்ந்து திணறிவருவதால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை ஆடவைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஆனால் ரஹானே அணியில் எடுக்கப்பட்டாலும், 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அவர், அவரது வழக்கமான 5ம் வரிசை பேட்டிங் ஆர்டரில் ஆடவில்லை. அந்தவரிசையில் ஜடேஜா இறக்கப்பட்டு, ரஹானே 6ம் வரிசையில் பேட்டிங் ஆடினார். ஆனால் ஜடேஜாவும் சோபிக்கவில்லை; ரஹானேவும் சோபிக்கவில்லை. அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில், ரஹானேவின் பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா இறக்கப்பட்டது குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்ஷ்மண், இடது - வலது பேட்டிங் காம்பினேஷனை கருத்தில்கொண்டு 5ம் வரிசையில் ஜடேஜா இறக்கப்பட்டிருக்கலாம். இடது - வலது பேட்டிங் காம்பினேஷனை கொண்டு எதிரணி பவுலர்களின் ரிதத்தை தடுக்கலாம் என்பதற்காக ஜடேஜா இறக்கப்பட்டிருக்கலாம் என்று லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.