என்னை ஓபனிங்கில் இறக்க சொல்லி கங்குலியிடம் பரிந்துரைத்தது அந்த வீரர் தான்..! சேவாக் ஓபன் டாக்
தன்னை தொடக்க வீரராக இறக்கச்சொல்லி அப்போதைய இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலியிடம் பரிந்துரைத்தது, ஜாகீர் கான் தான் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
இளம் வீரர்கள் பலரை இனம் கண்டு இந்திய அணியில் வளர்த்துவிட்டுள்ளார் கங்குலி. கங்குலி கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், தோனி உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணியில் பின்னாளில் நட்சத்திர வீரராக ஜொலித்தனர்.
ஒரு கேப்டனாக கங்குலி எடுத்த அதிரடியான, துணிச்சலான முடிவுகள் இந்திய அணியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவியது என்பதை மறுக்க முடியாது.
இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்த தென்னாப்பிரிக்கா! பரிதாப இங்கிலாந்து
அப்படியான கங்குலியின் தரமான முடிவுகளில் ஒன்றுதான், மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆடிவந்த வீரேந்திர சேவாக்கை ஓபனிங்கில் இறக்கிவிட்டது. மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆடிவந்த சேவாக் மீது நம்பிக்கை வைத்து அவரை ஓபனிங்கில் இறக்கிவிட்டார் கங்குலி. தான் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று கூறி, ஓபனிங்கில் இறங்க தயங்கிய சேவாக்கிற்கு நம்பிக்கையூட்டி ஓபனிங்கில் இறக்கிவிட்டார் கங்குலி.
அதன்பின்னர் ஒரு தொடக்க வீரராக வீரேந்திர சேவாக், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் செய்த சாதனைகள் அனைத்தும் வரலாறு. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என சாதனைகளை வாரிக்குவித்த வீரேந்திர சேவாக், அந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த பவுலர்களுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பேட்ஸ்மேன்.
ஷோயப் அக்தர், பிரெட் லீ ஆகிய உலகத்தரம் வாய்ந்த, மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களையே தெறிக்கவிட்டர் சேவாக்.
இதையும் படிங்க - ZIM vs IND: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?
ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடக்கவுள்ள நிலையில், அந்த தொடர் குறித்த ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அக்தருடன் உரையாடிய சேவாக், தான் ஓபனிங்கில் இறங்கியது குறித்து பேசியுள்ளார்.
தொடக்க வீரராக இறக்கப்பட்டது குறித்து அக்தர் கேட்க, அதற்கு பதிலளித்த வீரேந்திர சேவாக், எனது கெரியரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் தான் தொடங்கினேன். 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியபோதெல்லாம் மிடில் ஆர்டரில் தான் ஆடினேன். அதன்பின்னர் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டேன். நான் தொடக்க வீரரானதற்கு ஜாகீர் கான் தான் காரணம். அவர் தான் சௌரவ் கங்குலியிடம் என்னை தொடக்க வீரராக இறக்குமாறு பரிந்துரைத்தார். அதன்பின்னர் தான் கங்குலி என்னை தொடக்க வீரராக இறக்கிவிட்டார் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.