பவுண்டரி லைனில் நடந்த பயங்கரம்.. ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் வாய்பிளக்க வைத்த கோலி.. வீடியோ
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விராட் கோலி, லாங் ஆனில் பிடித்த அபாரமான கேட்ச், அனைவரையும் வியக்கவைத்தது.
நல்ல ஃபீல்டிங் அணியான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளிலும் படுமோசமாக ஃபீல்டிங் செய்தது. முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 2 கேட்ச்களை தவறவிட்டார். நல்ல ஃபீல்டரான ரோஹித் சர்மா கைக்கு நேராக வந்த கேட்ச்சை விட்டார்.
அதேபோல திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த போட்டியில் அதைவிட மோசம். புவனேஷ்வர் குமாரின் ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் முறையே சிம்மன்ஸ் மற்றும் எவின் லூயிஸின் கேட்ச்களை தவறவிட்டனர். ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர்களில் ஒருவரான ஜடேஜா கூட மிஸ்ஃபீல்டு செய்தார் என்பதுதான் வருத்தமான விஷயம்.
இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் தோற்றதற்கு முக்கியமான காரணமே மோசமான் ஃபீல்டிங்தான். எல்லாரும் கைக்கு வந்த கேட்ச்சையே தவறவிட்டு கொண்டிருந்த நிலையில், கேப்டன் கோலி மிரட்டலான ஒரு கேட்ச்சை பிடித்து எதிரணி வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தினார்.
ஹெட்மயர் தூக்கி அடித்த பந்து ஸ்டிரைட்(லாங் ஆனை ஒட்டி) திசையில் சிக்ஸரை நோக்கி சென்றது. லாங் ஆனில் ஃபீல்டிங் செய்த விராட் கோலி, வெறித்தனமாக ஓடி அபாரமாக அந்த கேட்ச்சை பிடித்தார். ஓடிய வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தபோது கூட, பவுண்டரி லைனில் உடல் பட்டுவிடாத படி, அருமையாக உடம்பை பேலன்ஸ் செய்து, அந்த கேட்ச்சை பிடித்தார். அந்த வீடியோ இதோ..