தம்பிங்களா நல்லா கேட்டுக்கங்க.. இளம் வீரர்களுக்கு கேப்டன் கோலி விடுத்த எச்சரிக்கை
அடுத்த ஆண்டு(2020) ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், டி20 அணியில் ஆடும் இளம் வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே அணியை கட்டமைக்கும் பணிகளை இந்திய அணி தொடங்கிவிட்டது. பேட்டிங் டெப்த்தை அதிகப்படுத்தும் விதமாக பேட்டிங் ஆட தெரியாத ஸ்பின்னர்களான குல்தீப், சாஹல் நீக்கப்பட்டு, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேபோல ராகுல் சாஹர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகிய இளம் வீரர்களுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி வரும் 18ம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்து பேசிய கேப்டன் கோலி, டி20 உலக கோப்பைக்கு முன்னதாக நமக்கு 30 போட்டிகல் உள்ளன. நான் அணியில் இணைந்த புதிதில் 15 வாய்ப்புகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. கிடைத்த 4-5 வாய்ப்புகளை பயன்படுத்தி திறமையை நிரூபித்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலையில்தான் நாம் உள்ளோம். எனவே இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முடிந்தளவிற்கு சிறப்பாக பயன்படுத்தியாக வேண்டும். தங்களுக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி விரைவில் தங்களது திறமையை நிரூபிப்பவருக்குத்தான் அணியில் இடம் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.