சச்சின், சேவாக், யுவராஜ் மாதிரி பிளேயர் அந்த பையன்..! உலக கோப்பையில் அவன் கண்டிப்பா ஆடணும்.. ரெய்னா அதிரடி
ஒருநாள் உலக கோப்பையில் தீபக் ஹூடாவை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்றும் அதற்காக அவருக்கு இப்போதே ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.
ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ஒருநாள் உலக கோப்பை நெருங்குவதால் அனைத்து அணிகளும் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக ஆடிவருகின்றன.
2011ம் ஆண்டு தோனி கேப்டன்சியில் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் நடந்த 2 ஒருநாள் உலக கோப்பைகளிலும் அரையிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறி ஏமாற்றமளித்தது.
எனவே 12 ஆண்டுகளுக்கு பீறகு இந்திய மண்ணில் மீண்டும் உலக கோப்பையை ஜெயிக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. அதற்காக வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டாலும், ஸ்பின் ஆல்ரவுண்டருக்கான ஒரு இடம் மட்டும் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றப்படும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மலிங்காவின் சாதனையை முறியடித்து முரளிதரன் சாதனையை விரட்டும் மிட்செல் ஸ்டார்க்
இந்நிலையில், உலக கோப்பையில் தீபக் ஹூடாவை ஆடவைக்க வேண்டும் என்றும், அதற்காக அவருக்கு இப்போதே சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
அதிரடி பேட்ஸ்மேனான தீபக் ஹூடா, ஆஃப் ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடியவர். அவர் பந்துவீசக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால் தான் அவரை டி20 உலக கோப்பையில் ஆடவைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு பவுலிங்கே கொடுக்காமல், பந்துவீச்சில் அவரை பயன்படுத்திக்கொள்ள தவறியது இந்திய அணி. ஒருநாள் போட்டிகளிலும் அவ்வப்போது வாய்ப்பு பெற்ற தீபக் ஹூடா பின்னர் ஒதுக்கப்பட்டார்.
இப்போது ஒருநாள் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. 10 ஒருநாள் போட்டிகளி ஆடி 189 ரன்கள் அடித்துள்ள தீபக் ஹூடா, 3 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், தீபக் ஹூடா குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, சேவாக், யுவராஜ், சச்சின் ஆகிய மூவரும் பவுலிங்கும் வீசுவார்கள். நானும் யூசுஃப் பதானும் கூட பந்துவீசுவோம். இடது கை பேட்ஸ்மேன் பேட்டிங் ஆடினால் தோனி என்னை பந்துவீச சொல்வார். தீபக் ஹூடாவும் அந்த மாதிரியான வீரர். ஹூடா நல்ல பேட்ஸ்மேன்; டெரிஃபிக் ஃபீல்டர்; நல்ல ஆஃப் ஸ்பின்னரும் கூட.
நம்மிடம் ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோர் இருக்கின்றனர். நமது ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமானவை. உலக கோப்பை தொடங்கும் சமயத்தில் குளிர்காலம் தொடங்கிவிடும். அப்போது பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்து நிறைய திரும்பாது. அக்ஸர் படேல், ஜடேஜா, ஹூடா ஆகிய மூவருமே முக்கியமான வீரர்கள் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.