ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காது என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இந்திய அணி தேர்வு மிகச்சவாலானதாக இருக்கும்.
இந்திய அணியின் ஓபனிங் காம்பினேஷன், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் என அனைத்துமே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒரேயொரு இடத்திற்கான போட்டி மட்டுமே நிலவுகிறது. சூர்யகுமார் யாதவ் - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்கும் 4ம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது. அதேபோல, ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவருவதால் விக்கெட் கீப்பர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது.
ரோஹித் - ராகுல் தொடக்க வீரராக இறங்குவார்கள். ரிசர்வ் தொடக்க வீரராக இஷான் கிஷன் இருப்பார். எனவே சீனியர் தொடக்க வீரரான ஷிகர் தவான் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவந்தாலும், அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
அதைத்தான் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கரும் கூறியுள்ளார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் குறித்து முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால், இங்கிலாந்து தொடரிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் இருக்காது. என்னை பொறுத்தமட்டில் ரோஹித்தும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
