ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் தான் முடியும் என்றும் இனிமேல் இந்த போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி, மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2ம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து 3ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது.

வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக முதல் செசன் முழுவதும் பாதிக்கப்பட்டது. லேசான சாரல் மழை தொடர்ந்து நீடித்ததால் 4ம் நாள் ஆட்டம் முழுவதுமே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

நாளை கடைசி நாள் ஆட்டம். ரிசர்வ் டே-வான ஆறாம் நாளும் போட்டி நடந்தாலும் இனிமேல் இந்த போட்டியில் முடிவு கிடைப்பது கடினம், எனவே கண்டிப்பாக டிராவில் தான் முடியும்.

அதைத்தான் கவாஸ்கரும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் டிராவில் தான் முடியும். எனவே கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். முதல் முறையாக ஒரு உலகத்தொடர் முடிவில்லாமல் முடியவுள்ளது. கால்பந்து போட்டியெல்லாம் டிராவில் முடிந்தால், வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி ஷூட் அவுட்ஸ் உள்ளது. அதேபோல டென்னிஸிலும் உள்ளது. 

இந்த ஃபைனலில் இன்னும் 2 நாட்களில் 3 இன்னிங்ஸ் ஆடப்பட வேண்டும். இரு அணிகளும் படுமட்டமாக ஆடினாலன்றி, அதற்கு வாய்ப்பில்லை என்று கவாஸ்கர் தெரிவித்தார்.