ஹசரங்கா, நிசாங்காவின் பொறுப்பான அரைசதத்தால் பெரிய ஸ்கோரை அடித்த இலங்கை..! அயர்லாந்துக்கு கடின இலக்கு
ஹசரங்கா மற்றும் நிசாங்காவின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவரில் 171 ரன்களை குவித்த இலங்கை அணி, 172 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் வரும் 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கும் நிலையில், கடந்த 17ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. இன்று அபுதாபியில் இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நடந்துவருகிறது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா, பால் ஸ்டர்லிங் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து, தினேஷ் சண்டிமால்(6) மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ(0) ஆகிய இருவரும் ஜோஷுவா லிட்டில் வீசிய 2வது ஓவரின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்க, 8 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது இலங்கை அணி.
4வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்த ஹசரங்கா அருமையாக ஆடினார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய ஹசரங்கா, தொடர்ந்து அடித்து ஆடி அரைசதம் அடித்தார். ஹசரங்காவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து நிசாங்காவும் சிறப்பாக ஆட, 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 123 ரன்களை குவித்தனர்.
இதையும் படிங்க - #T20WorldCup பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணி..! டேல் ஸ்டெய்னின் தரமான தேர்வு
அபாரமாக ஆடிய ஹசரங்கா 71 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த நிசாங்கா 61 ரன்னிலும் ஆட்டமிழக்க, கடைசியில் கேப்டன் ஷனாகா 11 பந்தில் 21 ரன்கள் அடித்து ஃபினிஷ் செய்ய, 20 ஓவரில் 171 ரன்களை குவித்த இலங்கை அணி, 172 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.