வங்கதேசம் படுமட்டமான பேட்டிங்.. முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 93 ரன்களை குவித்து 7 ரன்னில் சதத்தை தவறவிட்டார். கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் 67 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 367ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் மஹ்மதுல் ஹசன் ஜாய் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஹசன் ஜாய் 137 ரன்களை குவிக்க, அவரது அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 298 ரன்கள் அடித்தது.
69 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 204 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணி மொத்தமாக 273 ரன்கள் முன்னிலை பெற, 274 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது. 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 19 ஓவரில் 53 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 220 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது தென்னாப்பிரிக்க அணி.