ஜாக் கிராவ்லி கொடுத்த கேட்சை சர்ஃபராஸ் கான் பிடித்த நிலையில், எவ்வளவோ சொல்லியும் ரோகித் சர்மா ரெவியூ எடுக்க மறுத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி தற்போது தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மார்க் வுட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று இந்திய அணியில் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா அணியில் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பென் டக்கெட் 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆலி போப் குல்தீப் யாதவ் பந்தில் 11 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் குல்தீப் யாதவ் வீசிய 25.5 ஆவது பந்தில் ஜாக் கிராவ்லி அடித்த பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் திசைக்கு சென்றது. இதில் துருவ் ஜூரெல் கையில் பட்டு அந்தரத்தில் பற்றக் ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த சர்ஃபராஸ் கான் டைவ் அடித்து பந்தை கேட்ச் பிடித்தார். இதையடுத்து நடுவரிடம் அவுட் கேட்கவே, அவர் அவுட் கொடுக்க மறுத்தார்.
இதன் காரணமாக கேப்டன் ரோகித் சர்மாவை ரெவியூ எடுக்க வலியுறுத்தினார். ஆனால், கடைசி வரை ரோகித் சர்மா ரெவியூ எடுக்காத நிலையில் டிவி ரீப்ளேவில் பந்து பேட்டி பட்டது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து சர்ஃபராஸ் கான், குல்தீப் யாதவ் மற்றும் ரோகித் சர்மா மூவரும் சிரித்துக் கொண்டனர். மேலும், ரெவியூ எடுக்காமல் விட்டுவிட்டேனே என்று ரோகித் சர்மா பேசியுள்ளார்.
