இலங்கை அணியில் அவரு ஒருவர் ஆடியிருந்தால் 2011 உலக கோப்பை எங்களுடையது..! சங்கக்கரா வேதனை
2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியில் காயத்தால் ஆடமுடியாமல் போன ஆல்ரவுண்டர் மட்டும் அணியில் இருந்திருந்தால், கோப்பையை ஜெயித்திருப்போம் என்று இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகள் கழித்து 2011ல் இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்று அசத்தியது.
2011ல் நடந்த உலக கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி, இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. மும்பை வான்கடேவில் நடந்த அந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 50 ஓவரில் 274 ரன்களை குவித்தது. கம்பீர்(97 ரன்கல்), தோனி(91 ரன்கள் நாட் அவுட்) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.
அந்த போட்டியில் இலங்கை ஆல்ரவுண்டர் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆடியிருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும் என்று 2011 உலக கோப்பையில் இலங்கை அணியை வழிநடத்திய முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்திய அணியின் ஸ்பின்னர் அஷ்வினுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார் குமார் சங்கக்கரா. அப்போது இதுகுறித்து பேசிய சங்கக்கரா, இலங்கை அணி இறுதி போட்டியில் கேட்ச்களை தவறவிட்டது உள்ளிட்ட பல காரணங்களை பலரும் கூறலாம். ஆனால் ஆஞ்சலோ மேத்யூஸ் காயத்தால் இறுதி போட்டியில் ஆடமுடியாமல் போனதுதான் உண்மையான திருப்புமுனை.
மேத்யூஸ் ஆடாதது தான் எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அவர் ஆடாததால் அணி காம்பினேஷனை மாற்ற நேரிட்டது. மேத்யூஸ் அணியின் ஐந்தாவது பவுலர் மட்டுமல்லாது 7வது பேட்டிங் ஆர்டரில் இறங்கி அருமையாக ஆடக்கூடியவர். அருமையான ஆல்ரவுண்டர் மேத்யூஸ். அவர் காயத்தால் ஆடமுடியாமல் போனதுதான் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
மேத்யூஸ் அணியில் இருந்திருந்தால், டாஸ் வென்ற நாங்கள், கண்டிப்பாக இந்தியாவை முதலில் பேட்டிங் ஆடவிட்டு சேஸிங்கை தேர்வு செய்திருப்போம் என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
ஆஞ்சலோ மேத்யூஸ், இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர். இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கக்கூடிய பேட்ஸ்மேன். பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய அவர், சூழலுக்கு ஏற்ப ஆடும் பக்கா பேட்ஸ்மேன். தடுப்பாட்டம் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்கும் அதேவேளையில், டெத் ஓவர்களில் அதிரடியாகவும் ஆடக்கூடியவர் மேத்யூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.