தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று முன்னாள் வீரர் சபா கரீம் கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கான ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
2007ல் முதல் முறையாக நடந்த டி20 உலக கோப்பையை வென்ற தோனி, அதன்பின்னர் அனைத்து டி20 உலக கோப்பைகளிலும் ஆடியவர். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 3 முறை டைட்டிலை வென்று கொடுத்தவர் தோனி. எனவே அவரது அனுபவமும், நிதானமான மனநிலையும் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையில் உதவும் என்பதால் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்திய அணியில் ஏற்கனவே தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என தனித்தனி துறைகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்கள் இருக்கும் நிலையில், திடீரென தோனியை ஆலோசகராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.
இதுதொடர்பாக பிசிசிஐ தரப்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், தோனியின் நியமனம் குறித்து பேசியுள்ள சபா கரீம், இந்திய அணியின் வியூகங்கள், ஆடும் லெவன் காம்பினேஷன் ஆகிய விஷயங்களில் அணி நிர்வாகம் சரியாகத்தான் செயல்படுகிறதா என்பதை வெளியிலிருந்து பார்த்து சரியாக கூறக்கூடிய ஒரு நபர் தேவை. அதுதான் தோனி. தோனி மாதிரியான அனுபவமான சாம்பியன் வீரரின் பங்களிப்பு முக்கியம்.
சர்ச்சை இல்லாத வகையிலான எச்சரிக்கையை கொடுக்கக்கூடியதே தோனியின் ரோல். தோனியும் கோலியும் இணைந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தருவார்கள் என்று சபா கரீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.