களத்தில் செட்டில் ஆகி சதத்தை நோக்கி ரோஹித்; பீதியில் இலங்கை! கில்லும் அரைசதம்.. இந்தியாவிற்கு அபாரமான தொடக்கம்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்து, தொடர்ந்து அருமையாக ஆடிவருகின்றனர்.
இந்தியா - இலங்கை இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் இரட்டை சத நாயகன் இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துனித் வெல்லாலகே, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர். ஆரம்பத்தில் ஷுப்மன் கில் அடித்து ஆட, அதன்பின்னர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட ஆரம்பித்தார். அதிரடியாக ஆடி ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் அரைசதம் அடித்தார்.
ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அரைசதம் அடிக்க, அரைசதத்திற்கு பின் அடித்து ஆடிய கில் 60 பந்தில் 70 ரன்கள் அடித்து 20வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் கில்லும் இணைந்து 19.4 ஓவரில் 148 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்து விட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய வீரர். அதுவும் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 2 இரட்டை சதம் விளாசியுள்ள ரோஹித் சர்மா, களத்தில் நிலைத்து விட்டதால், ரோஹித்திடமிருந்து ஒரு கம்பேக் மெகா இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை கொஞ்சம் சுதாரிப்பாக இருக்கவேண்டும். இல்லையெனில் இதற்கு முன் 2 இரட்டை சதம் அடித்ததை போல இலங்கை பவுலிங்கை அடித்து நொறுக்கி மாபெரும் ஸ்கோரை அடித்துவிடுவார் ரோஹித்.