#ENGvsIND ஒரே ஓவரில் ரோஹித், புஜாராவை வீழ்த்தி இங்கிலாந்துக்கு பிரேக் கொடுத்தார் ராபின்சன்
4வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் - புஜாரா ஆகிய இருவரையுமே ஒரே ஓவரில் வீழ்த்தி இங்கிலாந்துக்கு பிரேக் கொடுத்தார் ஃபாஸ்ட் பவுலர் ராபின்சன்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் விராட் கோலியும் ஷர்துல் தாகூரும் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூரும் 57 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 99 ரன்கள் பின் தங்கியது.
99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். நன்றாக ஆடிய ராகுல் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
ஆனால் ரோஹித் சர்மா இந்த முறை கிடைத்த ஸ்டார்ட்டை வீணடிக்காமல் பெரிய இன்னிங்ஸை ஆடி சதமடித்தார். 94 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார் ரோஹித். இந்தியாவிற்கு தனது முதல் சதத்தை ரோஹித் பதிவு செய்ய, புஜாரா அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 153 ரன்களை குவித்தனர்.
புதிய பந்தை எடுத்ததும் புதிய பந்தில் ராபின்சன் வீசிய 81வது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா 127 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் 61 ரன்களுக்கு புஜாராவையும் வீழ்த்தினார் ராபின்சன். ஒரே ஓவரில் இந்திய அணியின் செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் ரோஹித், புஜாரா ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, கோலியும் ஜடேஜாவும் இணைந்து ஆடிவருகின்றனர்.