கோலியை பற்றி பிசிசிஐயிடம் நான் போட்டுவிட்டனா..? யாருடா இதையெல்லாம் கிளப்பிவிடுறது..? அஷ்வின் ஆத்திரம்
விராட் கோலியின் ஆட்டிடியூட் பற்றி பிசிசிஐயிடம் ரவிச்சந்திரன் அஷ்வின் புகார் அளித்ததாக தகவல் பரவிய நிலையில், அது முற்றிலும் தவறானது என்று மறுத்துள்ளார் அஷ்வின்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆட்டிடியூட் பற்றி பிசிசிஐயிடம் ஒரு சீனியர் வீரர் புகார் அளித்ததாக தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில், அது அஷ்வின் தான் என்று ஒரு தகவல் வெளிவந்து பரவியது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வினை கேப்டன் விராட் கோலி ஒரு போட்டியில் கூட அணியில் சேர்க்கவில்லை. கேப்டன் கோலி வேண்டுமென்றே அஷ்வினை ஓரங்கட்டியதாகவே பார்க்கப்பட்டது.
அதனால் கடும் அதிருப்தியடைந்த அஷ்வின், கோலியின் அணுகுமுறை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் புகார் அளித்ததாகவும், தனக்கு அணியில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. அஷ்வின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பொறுப்புடன் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால்தான், அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை என்று கோலி கூறியதாகவும் தகவல் பரவியது.
இந்த தகவல் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள அஷ்வின், இதுமாதிரியான குப்பை தகவல்களை எழுதுவதை மீடியா நிறுத்த வேண்டும். பிசிசிஐயிடம் எந்த இந்திய வீரரும் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது பேச்சுவழக்கிலோ எந்த புகாரும் அளிக்கவில்லை. இதுமாதிரியான தவறான தகவல்களுக்கு எல்லாம் பிசிசிஐ விளக்களித்துக்கொண்டு இருக்காது. இந்த தகவல் பரவிய அதற்கு மறுநாளே, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்போவதாக செய்தி பரவியது. இதையெல்லாம் யார் சொல்வது என்று கோபத்துடன் அஷ்வின் கேள்வியெழுப்பியுள்ளார்.