ரிஷப் பண்ட் மோசமான ஃபார்மில் இருக்கும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் சந்தேகமாகியுள்ள நிலையில், அவருக்கு இடம் இருக்கிறதா இல்லையா என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியுள்ளார்.
தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடித்தவர் ரிஷப் பண்ட். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், தோனியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரிஷப் பண்ட், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்திய அணியில் தனக்கான இடத்தையும், ரசிகர்களின் அபிப்ராயத்தையும் பெற்றார்.
ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ஐபிஎல்லில் சரியாக ஆடாத ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், கேப்டன்சியிலும் சுமாராகவே செயல்படுகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தமாகவே வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், 4வது டி20 போட்டியில் 23 பந்தில் வெறும் 17 ரன் மட்டுமே அடித்தார். கடைசி டி20 போட்டியில் ஒரு ரன் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய அங்கமான ரிஷப் பண்ட்டின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது. அதுமட்டுமல்லாது, தென்னாப்பிரிக்க அணி திட்டமிட்டே ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துவீச, அதை விரட்டி அடிக்க முயன்றே திரும்பத் திரும்ப அவுட்டானார். செய்த தவறையே ரிஷப் பண்ட் திரும்பத் திரும்ப செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகிய வீரர்களும் உள்ள நிலையில், தினேஷ் கார்த்திக்கும் அண்மைக்காலத்தில் அபாரமாக பேட்டிங் ஆடி தன்னை சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளதால் ரிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டம் இந்திய அணியில் அவரது இடம் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், மோசமான ஃபார்மில் உள்ள ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட் நிறைய ஸ்கோர் செய்ய நினைத்தார். ஆனால் அவரால் அது முடியாமல் போனது பெரிய பிரச்னையில்லை. அடுத்த சில மாதங்களுக்கான இந்திய அணியின் திட்டத்தில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக இருக்கிறார். மிடில் ஓவர்களில் அடித்து ஆடக்கூடிய வீரர்கள் தேவை. 2-3 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.
ஐபிஎல்லில் பெரியளவில் அவர் ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், நல்ல ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடியிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல்லில் அபாரமாக ஆடி பெரிய ஸ்கோர் செய்திருந்தார். அதேமாதிரி ஆட்டத்தை விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். மிடில் ஓவர்களில் அவர் மீண்டும் அதிரடியான பேட்டிங்கை ஆடுவார் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
