Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று நியூசிலாந்து சாதனை

முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி வென்றுள்ளது.
 

new zealand win  icc world test championship title
Author
Southampton, First Published Jun 23, 2021, 11:19 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் முழுவதுமாக தடைபட்டதையடுத்து, 2ம் நாள் தான் போட்டி தொடங்கியது. சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 62 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். புஜாரா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அதன்பின்னர் கோலியும் ரஹானேவும் இணைந்து நன்றாக ஆடினர். கோலி 44 ரன்களிலும் சிறப்பாக ஆடிய ரஹானே 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட்டை 4 ரன்னில் ஜாமிசன் வீழ்த்த, அஷ்வின் 22 ரன்களுக்கும் ஜடேஜா 15 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, டெயிலெண்டர்கள் மளமளவென சரிய, 217 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே அரைசதம் அடித்தார். 54 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். 3ம் நாள் ஆட்ட முடிவில்  2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது நியூசிலாந்து அணி. வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் ரத்தானது.

5ம் நாள் ஆட்டமும் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு தொடங்கியது. 5ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய பவுலர்கள் ரன்னே கொடுக்காமல் டைட்டாக பந்துவீசி நெருக்கடியை அதிகரித்தனர். வில்லியம்சன், டெய்லர் ஆகிய இருவருமே ரன் அடிக்க முடியாமல் திணறினர். 14 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், எப்படியாவது ரன் அடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அடித்து ஆட முயற்சித்து ஷமியின் பந்தில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டெய்லர்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹென்ரி நிகோல்ஸை இஷாந்த் சர்மா வீழ்த்த, வாட்லிங்கை வெறும் ஒரு ரன்னில் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் ஷமி. உணவு இடைவேளைக்கு பிறகு காலின் டி கிராண்ட் ஹோம், கைல் ஜாமிசன், டிம் சௌதி ஆகியோர் ஒருமுனையில் அடித்து ஆட, மறுமுனையில் நிலைத்து ஆடினார் வில்லியம்சன்.  அடித்து ஆடிய கைல் ஜாமிசன், 16 பந்தில் 21 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று கடுமையாக போராடி நியூசிலாந்து அணியை காப்பாற்றிய வில்லியம்சன், 176 பந்தில் 49 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவருக்கு சர்ப்ரைஸாக திடீரென ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்மார்ட்டாக வீசி அவுட் ஆக்கினார் இஷாந்த் சர்மா. அதற்கு முந்தைய பந்தை ஃபுல் லெந்த்தில் வீசிய இஷாந்த் சர்மா, அடுத்த பந்தை ஷார்ட் பிட்ச்சாக வீசினார். அந்த லெந்த்தில் அந்த பந்தை எதிர்பார்த்திராத வில்லியம்சன், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து 49 ரன்னில் வெளியேறினார்.

டிம் சௌதி கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்கள் விளாச, முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியின் டெயிலெண்டர்கள் அடித்து ஆடியதால் தான் நியூசிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸ் முடிவில் 32 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

32 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோர் நல்ல ஸ்டார்ட் கிடைத்தும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில்லை 8 ரன்னுக்கும் ரோஹித் சர்மாவை 30 ரன்னுக்கும் வீழ்த்தினார் டிம் சௌதி. இதையடுத்து 5ம் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த கோலியும் புஜாராவும் ரிசர்வ் நாளான 6ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் முறையே 13 மற்றும் 15 ரன்களுக்கு வீழ்த்தினார் கைல் ஜாமிசன். 

ரிஷப் பண்ட் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். அவருடன் ஜடேஜாவும் ஜோடி சேர, பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் உணவு இடைவேளைக்கு பிறகு, ரிஷப்பும் ஜடேஜாவும் அடித்துத்தான் ஆடுவார்கள் என்று தெரிந்ததால், ஃபீல்டர்களை பவுண்டரி லைனில் நிறுத்தி வாக்னர், போல்ட், ஜாமிசன் ஆகியோர் ரன்னே விட்டுக்கொடுக்காமல் டைட்டாக பந்துவீசினர்.

ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை. சிங்கிள், டபுள்ஸ் கூட விட்டுக்கொடுக்காமல் மிகவும் சிறப்பாக பந்துவீசினர் நியூசிலாந்து பவுலர்கள். ரன்னே அடிக்க முடியாமல் திணறிய ஜடேஜா, வாக்னரின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் இறங்கி வந்து தூக்கியடிக்க, அதை நிகோல்ஸ் கேட்ச் பிடிக்க, 41 ரன்னில் நடையை கட்டினார் ரிஷப் பண்ட்.

அதைத்தொடர்ந்து, அஷ்வின்(7), முகமது ஷமி(13), பும்ரா(0) ஆகியோர் ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.  இந்திய அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து, கடைசி நாள் ஆட்டத்தின் 2வது செசன் முடியவிருந்த தருவாயில் 139 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து விரட்ட தொடங்கியபோது, 55 ஓவர்கள் மீதமிருந்தன. மிகுந்த நம்பிக்கையுடன் இந்த இலக்கை விரட்ட தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம்(9) மற்றும் டெவான் கான்வே(19) ஆகிய இருவரையும் வீழ்த்தி நம்பிக்கையளித்தார் அஷ்வின். ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அணியின் சீனியர் வீரர்களான கேன் வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் இணைந்து பொறுமை காத்து நிதானமாக, அவசரப்படாமல் ஆட்டத்தை எடுத்துச்சென்றனர். 

ஐசிசி கோப்பை ஒன்றை வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையில் நியூசிலாந்து அணி இருந்தது, வில்லியம்சன் மற்றும் டெய்லர் ஆடிய விதத்திலேயே தெரிந்தது. அபாரமாக ஆடி கடைசி வரை இருவருமே களத்தில் நின்று போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்று நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். வில்லியம்சன் 52 ரன்களும் டெய்லர் 47 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios