TNPL 2022: நடுவிரலை காட்டி அநாகரிமாக நடந்துகொண்ட ஜெகதீசன்..! தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பாபா அபரஜித்தை நோக்கி நடுவிரலை காட்டி அநாகரிமாக நடந்துகொண்ட நிலையில், தனது செயலுக்கு மனம் வருந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் நேற்று (ஜூன்23) தொடங்கியது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சஞ்சய் யாதவ்(87) மற்றும் சூர்யபிரகாஷ் (62) ஆகிய இருவரது அரைசதத்தால் 20 ஓவரில் 184 ரன்கள் அடித்தது.
185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கடைசி நேர ஹரிஷ் குமாரின் அதிரடியால் 20 ஓவரில் 184 ரன்கள் அடித்து ஆட்டத்தை டை செய்தது.
இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் சேப்பாக் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது.
இந்த போட்டியில் 185 ரன்கள் என்ற இலக்கை சேப்பாக் அணி விரட்டியபோது, சேப்பாக் அணியில் ஆடிவரும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான ஜெகதீசனை, நெல்லை அணியில் ஆடிவரும் பாபா அபரஜித் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
15 பந்தில் 25 ரன்கள் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜெகதீசனை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அபரஜித். மன்கட் ரன் அவுட், முறையான ரன் அவுட் என்று விதியே மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. எனவே ஜெகதீசன் அபரஜித்தின் சூட்சமத்தால் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் மன்கட் ரன் அவுட்டால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த ஜெகதீசன், பெவிலியனுக்கு திரும்பும்போது அபரஜித்தை பார்த்து தகாத வகையில், நடுவிரலை காட்டி அசிங்கமான செய்கையை செய்தார்.
இதையும் படிங்க - இவரை மாதிரியான ஒரு பிளேயர் இந்திய அணியில் கண்டிப்பா தேவை.! அதிரடி வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு
ஜெகதீசனின் செயல் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அச்சம்பவம் கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில், தனது அநாகரிமான செயலை பின்னர் உணர்ந்து பெரிதும் வருந்தியாக கூறிய ஜெகதீசன், தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
நான் செய்தது தவறுதான். ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் அல்லாத தவறான எனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெகதீசன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.