- Home
- Sports
- Sports Cricket
- RCB ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. பாதுகாப்பு கவசத்துடன் பெங்களூரு சின்னசாமி ரெடி.. சிக்சர் மழைக்கு ரெடியா?
RCB ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. பாதுகாப்பு கவசத்துடன் பெங்களூரு சின்னசாமி ரெடி.. சிக்சர் மழைக்கு ரெடியா?
Bangaluru Chinnaswamy Stadium Gets Nod for IPL 2026: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் 2026
பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2026 போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) கோரிக்கையை ஏற்று, மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா இந்த அனுமதியை வழங்கியுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு IPL கோப்பையை RCB அணி முதல்முறையாக வென்றபோது, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு மேம்பாடுகள்
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஸ்டேடியத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழு, ஸ்டேடியத்தில் பல பாதுகாப்பு மேம்பாடுகளைச் செய்யப் பரிந்துரைத்தது. அதன்படி, ஸ்டேடியத்தின் நுழைவு வாயில்களை அகலப்படுத்துவது, வெளியேறும் பகுதிகளை மேம்படுத்துவது, அவசர மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது போன்ற முதல் கட்டப் பணிகள் முடிக்கப்பட்டன.
கர்நாடக அரசு ஒப்புதல்
இந்த பணிகளை மகேஷ்வர் ராவ் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு செய்து, திருப்தி தெரிவித்து அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே, போட்டிகளை நடத்த அரசு அனுமதித்துள்ளது. இதனால், ஸ்டேடியத்தின் முழு கொள்ளளவான 33,000 ரசிகர்களுடன் போட்டிகளை நடத்த முடியும்.
இதுகுறித்து KSCA வெளியிட்ட அறிக்கையில், "இன்று விதான சவுதாவில் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தலைமையில் நடந்த கூட்டத்தில், நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஸ்டேடியத்தின் ஏற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்த பிறகு, சின்னசாமி ஸ்டேடியத்தில் IPL போட்டிகளை நடத்த அமைச்சர் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபி ஒப்பனிங் மேட்ச் யாருடன்?
IPL 2026 தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 28 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான தொடக்க ஆட்டமும், ஏப்ரல் 5 அன்று RCB மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
சிக்சர் மழைக்கு ரெடியா?
இந்த அனுமதியைப் பெற உதவிய முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், நிபுணர் குழுத் தலைவர் ஜி.எம். மகேஷ்வர் ராவ், பெங்களூரு காவல் ஆணையர் ஸ்ரீமந்த் குமார் சிங் ஆகியோருக்கு KSCA தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான KSCA குழு, அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவுடன் இணைந்து இந்த பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டது. வரவிருக்கும் IPL போட்டிகளை RCB அணியுடன் இணைந்து பாதுகாப்பாகவும், தொழில்முறையாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் KSCA உறுதியளித்துள்ளது.

