முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்(சைனாமேன்) குல்தீப் யாதவ். 

ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. சிஎஸ்கே, கேகேஆர், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன. தலா 16 புள்ளிகளை பெற்றுள்ள சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றுவிட்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு செல்வது உறுதியாகிவிட்ட நிலையில், 4ம் இடத்திற்கு கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

எனவே இந்த 4 அணிகளுமே 4ம் இடத்திற்காக போராடிவரும் நிலையில், கேகேஆர் அணியின் சைனாமேன் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

குல்தீப் யாதவுக்கு கடந்த 2 சீசன்கள் சரியாக அமையவில்லை. 2019 ஐபிஎல்லில் அவரது பவுலிங்கை எதிரணிகள் அடித்து நொறுக்கியதன் விளைவாக, சீசனின் பாதியிலேயே ஆடும் லெவனிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். கடந்த சீசனிலும் அவருக்கு ஒருசில போட்டிகளிலேயே வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த சீசனிலும் சுனில் நரைனும், வருண் சக்கரவர்த்தியுமே ஸ்பின்னர்களாக ஆடவைக்கப்படுவதால், குல்தீப்புக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

தனக்கான இடத்திற்காக கடுமையாக பயிற்சி செய்துவந்தார் குல்தீப் யாதவ். இந்நிலையில், பயிற்சியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ள குல்தீப், இந்தியாவிற்கு திரும்புகிறார். முழங்கால் காயம் சரியாக நீண்டகாலம் ஆகும் என்பதால், குறைந்தது அடுத்த 4-6 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட் ஆடமாட்டார்.