Asianet News TamilAsianet News Tamil

இப்படியே போய்கிட்டு இருந்தால் ஒருநாள் கிரிக்கெட் அழிந்துவிடும்..! ஐசிசி-யை அலர்ட் செய்யும் கபில் தேவ்

உலகளவில் அதிகமான டி20 லீக் தொடர்கள் நடப்பது, ஒருநாள் கிரிக்கெட்டின் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதால், ஒருநாள் கிரிக்கெட்டை காப்பாற்ற ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
 

kapil dev alerts icc to take action to save odi cricket
Author
Chennai, First Published Aug 16, 2022, 6:12 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்  போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. ஆனால் டி20 கிரிக்கெட் அறிமுகமான இந்த 15 ஆண்டுகளில் அதிகமான டி20 லீக் தொடர்கள் உருவாகிவிட்டன.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் நாடுகளில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே தனித்தனியாக டி20 லீக் தொடர்களை நடத்துகின்றன. இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல பிக்பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக், லங்கா பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

இப்போது தென்னாப்பிரிக்க டி20 லீக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 லீக் என மேலும் 2 லீக் தொடர்கள் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளன. இப்படியாக உலகம் முழுதும் ஏகப்பட்ட டி20 லீக் தொடர்கள் ஆடப்படுகின்றன.

இந்த லீக் தொடர்களில் 2 மாதத்தில் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதால், கிரிக்கெட் வீரர்களும் டி20 லீக் தொடர்களில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிகமாக ஆடப்படுவதால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும், சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் தவிர, டி20 லீக் தொடர்களிலும் ஆடும் வீரர்கள், அதிகமான பணிச்சுமை காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடுகின்றனர். 

அண்மையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை காரணமாக, சமாளிக்க முடியாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். பென் ஸ்டோக்ஸின் ஓய்வு அறிவிப்பு, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணிக்கு 1983ல் முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கபில் தேவ், ஒருநாள் கிரிக்கெட் அழிந்து கொண்டிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டை ஐசிசி முறையாக நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். போகிறபோக்கை பார்க்கையில், ஐரோப்பாவில் கால்பந்து போட்டிகளில் நடப்பதை போன்று ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் நடக்கப்போகிறது. ஐரோப்பா கால்பந்து அணிகள், உலக கோப்பையை தவிர வேறு போட்டிகளில் மோதிக்கொள்ளாது. அதுமாதிரி ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலக கோப்பை மட்டும் நிலை உருவாகிவிடும்போல தெரிகிறது. 

கிளப் கிரிக்கெட் ஓரளவிற்கு ஆடப்படுவது பிரச்னையில்லை. ஆனால் இப்போது, தென்னாப்பிரிக்க டி20 லீக், ஐக்கிய அரபு அமீரக லீக் ஆகியவையும் புதிதாக அறிமுகமாகின்றன. எல்லா நாடுகளும் தனித்தனியாக கிளப் கிரிக்கெட் ஆடினால், சர்வதேச கிரிக்கெட்டில் உலக கோப்பை மட்டுமே ஆட நேரிடும் என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios