சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 220 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,  221 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஷீத் கானின் பந்தில் இதற்கு முன் அதிகமுறை அவுட்டாகியிருக்கும் பட்லர், அவரது பந்தில் ஸ்கோர் செய்ய முடியாமலும் திணறியிருக்கிறார். எனவே பவர்ப்ளேயில் அவருக்கு 2 ஓவர்களை கொடுத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன்.

ஆனால் ரஷீத் கானின் பவுலிங்கை கவனமாக ஆடிய பட்லர், நிதானமாக தொடங்கி, அதிரடி ஆட்டத்தை வேகப்படுத்தினார். அரைசதம் அடித்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச தொடங்கினார் பட்லர். பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடிய சஞ்சு சாம்சன், 48 ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லரும் சாம்சனும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 150 ரன்களை குவித்தனர்.

அரைசதத்திற்கு பின்னர் காட்டடி அடித்த பட்லர், சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், முகமது நபி, விஜய் சங்கர் என சன்ரைசர்ஸ் பவுலர்களை பாரபட்சம் பார்க்காமல் அடித்து நொறுக்கி, வெறும் 64 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 124 ரன்களை குவித்து 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் மில்லர் ஒரு சிக்ஸர் விளாச, 20 ஓவரில் 220 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 221 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.