தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜுக்கு பதிலாக இஷாந்த் சர்மா களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியும், 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
கேப்டவுனில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட். வரும் 11ம் தேதி (நாளை) கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தொடங்குகிறது.
2வது டெஸ்ட்டில் காயத்தால் ஆடிராத கேப்டன் விராட் கோலி, அடுத்த டெஸ்ட்டில் ஆடுவார். எனவே அவருக்கு பதிலாக 2வது டெஸ்ட்டில் ஆடிய ஹனுமா விஹாரி நீக்கப்படுவார். அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா ஆகிய 2 சீனியர் வீரர்களுக்கும் இன்னும் வாய்ப்பளிக்கப்படும் என்பதால், 3வது டெஸ்ட்டில் அவர்கள் ஆடுவார்கள். ஹனுமா விஹாரி தான் நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2வது டெஸ்ட்டில் பந்துவீசும்போது காயமடைந்த முகமது சிராஜ் 3வது டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா ஆடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இஷாந்த் சர்மாவைவிட நல்ல வேகமாக வீசக்கூடியவர் உமேஷ் யாதவ். ஆனால் உமேஷ் யாதவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றும், சிராஜுக்கு பதிலாக இஷாந்த் சர்மா தான் ஆடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தேச இந்திய அணி:
கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா.
