சுருக்கம்
இந்தியா-பாகிஸ்தான் பதட்டம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட, பிசிசிஐ சிறப்பு ரயில் ஏற்பாடு செய்கிறது. ஐபிஎல் தொடரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்துவரும் பதட்டங்கள் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு குழப்பத்தில் உள்ளது.
ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் தர்மசாலாவில் இருக்கும் ஐபிஎல் அணிகளின் வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினரை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல ஒரு சிறப்பு ரயிலை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
"அனைவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வர தர்மசாலாவுக்கு அருகில் இருந்து ஒரு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்கிறோம். தற்போது போட்டி ரத்து செய்யப்பட்டு மைதானம் காலி செய்யப்பட்டுள்ளது. நாளை சூழ்நிலையைப் பொறுத்து அடுத்தடுத்த முடிவுகளை எடுப்போம். இப்போதைக்கு, வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. சூழ்நிலை காரணமாக இன்றிரவு போட்டி தொடர முடியவில்லை" என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறினார்.
விமான நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பே இரு அணிகளும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளின் வீரர்களிடையே பதற்றம் நிலவியது. பின்னர், ஆட்டம் கைவிடப்பட்டதும், இரு அணிகளின் வீரர்களும் தங்கள் ஹோட்டலை அடைந்துவிட்டனர். அடுத்த நடவடிக்கை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கூடுதல் தகவலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்குமா? அல்லது பாதியில் கைவிடப்படுமா? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது. இது குறித்து பிசிசிஐ விரைவில் ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.